states

img

மத்தியப்பிரதேச திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 2 சிறுமிகள் பலி  

மத்தியப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கோடியா கிராமத்தைச் சேர்ந்த சிலர் திங்கள்கிழமை நடந்த திருமண விழா ஒன்றில்  கலந்து கொண்டனர். அப்போது இரவு உணவு சாப்பிட்டதை அடுத்து சிலருக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது.  

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை உடனே பாண்டுர்னா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கோடியா கிராமத்தைச் சேர்ந்த பாலக் உய்கே (8), மற்றும் அக்ஷரா உய்கே (12) ஆகிய 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 15 பேரில் 2 பேர் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.    

இதனைதொடர்ந்து, உள்ளூர் போலீஸ் அதிகாரி அமித்கோரி கூறுகையில், உணவில் விஷம் கலந்துள்ளதா? அல்லது வேறேதும் காரணமா இருக்கிறதா? என விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார்.